Publish Date: Sat, 02 Aug 2008 (18:52 IST)
Updated Date: Sat, 02 Aug 2008 (18:52 IST)
அல்கய்டா அமைப்பில் பின்லேடனுக்கு அடுத்ததாக கருதப்படும் அல்-ஜவஹரி காயமடைந்து விட்டதாக கூறப்படும் விஷயத்தில் பாகிஸ்தானிடம் எந்த ஆதாரமும் இல்லை என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டான் செய்தி சேனலுக்கு பாகிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் அக்தர் அப்பாஸ் இன்று அளித்துள்ள பேட்டியில், அமெரிக்க விமானப்படை தாக்குதலில் சிக்கி அல்-ஜவஹரி காயமடைந்தாரா அல்லது இறந்துவிட்டாரா என்பது குறித்த எந்தத் தகவலும் தங்களிடம் இல்லை எனக் கூறியுள்ளார்.
கடந்த ஜூலை 28ஆம் தேதி பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் அமெரிக்க படைகள் நடத்திய வான்வழி ஏவுகணைத் தாக்குதலில் 6 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
ஏவுகணைத் தாக்குதல் நடந்த மதரஸாவில் அல்-ஜவஹரியும் இருந்திருக்கலாம் எனக் கூறப்பட்டாலும், அமெரிக்க படைகள் அதுகுறித்து உறுதியான தகவல் எதையும் அப்போது தெரிவிக்கவில்லை.
ஆனால் நேற்று அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்தியில், பாகிஸ்தான் உளவு அமைப்பினரின் பார்வைக்கு கிடைத்த சில கடிதங்களில் அல்-ஜவஹரி படுகாயமடைந்து உயிருக்கு போராடும் நிலையில் அல்லது இறந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் அரசு அல்-ஜவஹரி குறித்து எந்தத் தகவலும் தங்களிடம் இல்லை எனக் கூறியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.