Publish Date: Fri, 01 Aug 2008 (17:29 IST)
Updated Date: Fri, 01 Aug 2008 (17:28 IST)
மத்திய துருக்கியில் மூன்று அடுக்குமாடி கொண்ட பெண்கள் தங்கும் விடுதி கட்டடம் இன்று அதிகாலை இடிந்து விழுந்ததில் அங்கு தூங்கிக்கொண்டிருந்த 11 மாணவிகள் உடல் நசுங்கி இறந்தனர்.
பெரிய அளவிலான எரிவாயு சிலிண்டர் வெடித்ததாலேயே கட்டம் இடிந்து விழுந்ததாக விபத்து நடந்த, பால்சிலர் பகுதி மேயர் தெரிவித்துள்ளார். இந்த கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து படுகாயங்களுடன் 20 மாணவிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர்.
பால்சிலர் என்னுமிடத்தில் உள்ள இந்த விடுதியில் 8 முதல் 16 வயதுக்குட்பட்ட 40க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது. அதிகாலை 4.15 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டதாகவும், அப்போது மாணவிகள் அனைவரும் நன்றாக தூங்கிக்கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்த மீட்பு குழுவினர் நிகழ்விடத்துக்கு விரைந்து கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.