Publish Date: Fri, 18 Jul 2008 (17:39 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:00 IST)
ஆகஸ்ட் 8ஆம் தேதி ஒலிம்பிக் துவக்க விழா நடைபெறும் சமயத்தில் பீஜிங் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பீஜிங் சர்வதேச விமானநிலையத்தின் துணைப் பொதுமேலாளர் அந்நாட்டு பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரை (பீஜிங் நேரப்படி) விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளுக்காக பயன்படுத்தப்படும் விமானங்கள் தவிர பிற விமானங்கள் புறப்படுவதற்கும், தரையிறங்குவதற்கும் அப்போது தடைவிதிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் துவக்க விழாவின் போது மேற்கொள்ளப்படும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே பீஜிங் சர்வதேச விமானநிலையம் 5 மணி நேரம் மூடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் பீஜிங்கில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பல விமானங்கள் ஆகஸ்ட் 8ஆம் தேதி ரத்து செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.