Publish Date: Thu, 17 Jul 2008 (14:51 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:00 IST)
வடமேற்கு சீனாவில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.
குயின்காய் மாகாணத்தின் டங்குலா என்னும் பகுதியில், அந்நாட்டு நேரப்படி இன்று காலை 6.58 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு நில நடுக்க தகவல் ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமத்திய ரேகையிலிருந்து 33.2 டிகிரி வடக்கும், தீர்க்க ரேகை 92.1 டிகிரி கிழக்கும் சந்திக்கும் இடத்தில் மையம் கொண்டு தாக்கியுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது குடியிருப்புகள் குலுங்கியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளுக்கு ஓடி வந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் ஏதும் இல்லை.
சீனாவில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் 12ஆம் தேதி சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.