Publish Date: Thu, 10 Jul 2008 (13:31 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:41 IST)
ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் என்னுமிடத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது இன்று காலை நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு தாலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். தாலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் என்பவர், தனது ஆட்கள்தான் தாக்குலை நடத்தியதாக் கூறினார் என்று பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதலில் காயமடைந்தவர்களில் இந்தியர்கள், ஆப்கான் பாதுகாப்பு படை வீரர்களும் அடங்குவர் என்றும் அந்த செய்தி கூறிகிறது.
இந்திய தூதரகத்தை குறிவைத்து தாக்கப்பட்ட இரண்டாவது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த திங்கள்கிழமை காபூலில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 4 இந்திய அதிகாரிகள் உள்பட 41 பேர் கொல்லப்பட்டதுடன், 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது நினைவு கூறத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகத்தை குறி வைத்து அடுத்தடுத்து இரண்டு முறை தாக்குதல் நடத்தப்பட்டது அங்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.