Publish Date: Wed, 09 Jul 2008 (11:03 IST)
Updated Date: Wed, 09 Jul 2008 (11:02 IST)
கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 140 டாலர்களைக் கடந்துள்ளதற்கு மேற்கு நாடுகளே காரணம் என்று மலேசியா சென்றுள்ள ஈரான் அதிபர் அஹமதிநிஜாத் குற்றம்சாட்டியுள்ளார்.
மலேசியாவில் செய்தியாளர்களை சந்தித்த இவர் ஈரான் மீது போர் தொடுப்பது பற்றிய செய்திகளை நகைச்சுவையான கருத்து என்று கூறியுள்ளார்.
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு குறித்து அவர் கூறுகையில், கச்சா உற்பத்தி அதன் தேவையை விட அதிகமாகவே உள்ளது, எனவே விலை உயர்விற்கு சந்தை நிலவரங்கள் காரணமல்ல என்றார்.
"ஒரு சிலர் தங்கள் லாபத்திற்காக கச்சா விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர். அவர்கள் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள்.
டாலர் மதிப்பு சரிவினாலும், எரிபொருள் மூலம் கிடைக்கும் அதிக வரி லாபங்களை அடையும் நோக்கத்துடன் அமெரிக்காவும், சில ஐரோப்பிய நாடுகளும் செய்து வரும் நடவடிக்கைகளால் கச்சா விலை அதிகரித்துள்ளது. சில ஐரோப்பிய நாடுகளில் 70 விழுக்காடு எரிபொருள் லாபம் அரசிற்கு வரியாகச் செல்கிறது.
இதன் அர்த்தம் என்னவெனில், கச்சா உற்பத்தி, ஏற்றுமதி நாடுகளின் வருவாயைக் காட்டிலும் அந்த நாடுகளின் வருவாய் அதிகமாக உள்ளது என்பதே.
"செயற்கையாக அதிகரிக்கப்பட்ட கச்சா விலை" காரணத்தை சாக்காக வைத்துக் கொண்டு வட துருவத்தில் கச்சா எண்ணெய் இரைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அமெரிக்கா நியாயப்படுத்தலாம்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.