Publish Date: Sun, 22 Jun 2008 (16:38 IST)
Updated Date: Sun, 22 Jun 2008 (16:38 IST)
ஈழத் தமிழர் பிரச்சனை குறித்துப் பேச இந்தியா தங்களை அழைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா சென்றிருந்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் கடந்த சனிக்கிழமை கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனைச் சந்தித்தனர்.
சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவிக்கையில், "இந்தியக் குழுவினர், புதுடில்லிக்கு வருமாறு எங்களை அழைத்தனர். பிரதமர் மன்மோகன் சிங் தமிழர்களின் பிரச்சனையை தீர்ப்பதில் உறுதியுடன் இருப்பதாகவும், அதற்காக அவர் இது குறித்த பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் நான் தெரிவித்த விடயங்களை உரிய தரப்புகளுக்கு எடுத்துக் கூறுவதாகவும் உறுதி வழங்கினர்.
வடக்கில் தற்போது நடைபெறும் போர் குறித்து கேட்ட கேள்வி ஒன்றுக்கு தங்கள் நாட்டில் இருந்து இன்னொரு அமைதிப்படை சிறிலங்காவுக்கு வராது என்று அவர்கள் பதிலளித்தனர்" என்றதாக புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.