Publish Date: Mon, 16 Jun 2008 (16:11 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:39 IST)
பிரிட்டன் வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிற்கு எதிராக சுமார் 2,500 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் நடத்திய தனிப்பட்ட விருந்தில் பங்கேற்க ஜார்ஜ் புஷ் பிரிட்டன் வந்துள்ளார். நாடாளுமன்ற சதுக்கம் அருகே இந்த விருந்தில் ஜார்ஜ் புஷ் பங்கேற்க வந்த போது சுமார் 2,500 பேர் ஜார்ஜ் புஷ்ஷின் வெளியுறவுக் கொள்கை, பயங்கரவாத எதிர்ப்புப் போர் ஆகியவற்றைக் கண்டித்து உரத்த குரலில் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் விசிலடித்தும், முரசறைந்தும் தங்களது எதிர்ப்பை காட்டியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட எழுத்தாளர் ஷீலா கல்லகன் அமெரிக்காவின் புதிய அதிபர் உலகின் மற்ற நாடுகளுடனான உறவை மேம்படுத்துவார் என்று கூறியதோடு, அதே கொள்கைகள் தொடர்ந்து நீடித்தால் மனித குலத்திற்கே அது துன்பமாகப் போய் முடியும் என்றார்.