Publish Date: Tue, 10 Jun 2008 (10:20 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:40 IST)
"இலங்கையில் யுத்தத்தை நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று இலங்கை தமிழ் அமைச்சர் சந்திரசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையின் சமுதாய அபிவிருத்தி மற்றும் சமூக அநீதி ஒழிப்பு துறை அமைச்சரும், மலையக மக்கள் முன்னணி என்ற கட்சியின் தலைவருமான பெ.சந்திரசேகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க இந்தியாவுக்கு தான் முழு தகுதியும், உரிமையும் இருக்கிறது. எனவே இந்தியா பார்வையாளர் போல் இருக்காமல் இந்த பிரச்சினையை தீர்க்க நேரடியாக தலையிடவேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆதரவு தரும்படி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களையும் சந்திக்க இருக்கிறேன்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மகள் பிரியங்கா, நளினியை சந்தித்து பேசி இருப்பது இலங்கை தமிழர் பிரச்சினை தீர ஒரு நல்ல சாதகமான அடையாளமாக கருதுகிறோம்.
இலங்கையில் நடைபெறும் யுத்தத்தினால் அந்நாட்டின் அனைத்து பகுதியுமே பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே முதலில் யுத்தத்தை நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்கவேண்டும். பலம் பொருந்திய நாடு என்ற அடிப்படையில் இந்திய அரசு பேச்சு வார்த்தை நடத்த இலங்கையை நிர்ப்பந்தம் செய்யலாம்.
விடுதலைப்புலிகளின் தனித்தமிழ் ஈழம் என்ற முடிவை இந்தியாவும் ஏற்காது, இலங்கையும் ஏற்காது. ஆனால் அதிகாரங்கள் பரவலாக்கப்படுவதன் மூலம் விடுதலைப்புலிகளும் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிகுறிகள் தென்படுகின்றன.
ஏற்கனவே நார்வே நாட்டு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்திய போது அவர்கள் பங்கேற்றது நினைவிருக்கலாம். இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக இன்னும் ஓரிரு மாதங்களில் டெல்லிக்கு சென்று சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், பாரதிய ஜனதா கட்சி தலைவர் அத்வானி ஆகியோரை சந்தித்து பேச இருக்கிறேன் என்று சந்திரசேகரன் கூறினார்.