ரஷ்யாவில் மீண்டும் துளிர்விடும் யோகக் கலை!
Publish Date: Mon, 21 Apr 2008 (17:42 IST)
Updated Date: Mon, 21 Apr 2008 (17:42 IST)
மனதையும், உடலையும் ஒரு முகப்படுத்தி முழுமை எய்தும் நோக்கத்துடன் பயிற்சி செய்யப்படும் யோகக் கலையை கடைசியாக ரஷ்யா முழு மனதுடன் ஆதரிக்கத் தொடங்கியுள்ளது.
ரஷ்யாவின் புதிய அதிபராக அடுத்த மாதம் பதவியேற்கவுள்ள அதிபர் திமித்ரி மெட்விடேவ் தன் மனைவி ஸ்வெட்லானாவின் அறிவுரைக்கிணங்க யோகக் கலையை பயின்று வருபவர்.சோவியத் ஒன்றியத்தின் தலைவராக இருந்த பிரஸ்னேவ் ஆட்சியில் ரஷ்யாவில் யோகக் கலையை பயில தடை விதிக்கப்பட்டிருந்தது. அது மத ரீதியான நம்பிக்கை சார்ந்தது என்று கம்யூனிச சிந்தாந்திகள் முடிவு செய்ததால் இந்த இந்தியக் கலையை பயில அங்குள்ள மக்களுக்கு ஆவலிருந்தும் அரசு இதற்கு தடை விதித்தது.தற்போது மெட்விடேவ் சிரசாசனத்தை முழு மூச்சுடன் செய்து வருவதில் பெருமை கொண்டுள்ளார். மெட்விடேவ் மூலம் மரபான இந்திய யோகக்கலை ரஷ்யாவில் படு வேகமாக பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முன்னாள் ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்சின் முயற்சியால் அங்கு டென்னிஸ் ஆட்டம் பெரிதும் வளர்ச்சியடைந்து கோர்னிகோவா, ஷரபோவா உள்ளிட்ட வீராஙனைகளை டென்னிஸ் உலகிற்கு அளித்தது ரஷ்யா.இவரையடுத்து, ஒரு காலத்தில் ரஷ்யாவில் தடைசெய்யப்பட்டிருந்த கராத்தே, ஜூடோ உள்ளிட்ட கீழைத்தேய போர்க்கலைகளை விளாடிமிர் புடின் தனது பதவிக் காலத்தில் பெரிதும் வளர்த்தெடுத்தார். மெட்விடேவ் பதவியேற்றவுடன் ரஷ்யாவில் யோகா மையங்களின் எண்ணிக்கை இந்தியாவைக் காட்டிலும் அதிகரிக்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
1960களின் இறுதியில் லியோனிட் பிரஸ்னேவ் தலைமை கம்யூனிஸ்ட் அரசு யோகக் கலையை தடை செய்தது. மாஸ்கோவில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் யோகப் பயிற்சி கற்றுக் கொடுத்து வந்த ஒரே இந்திய பேராசிரியர் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்த்தக்கது.
கம்யூனிச நாடான ரஷ்யாவே தற்போது யோகக் கலை குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், 2007ஆம் ஆண்டு செப்டம்பர் துவக்கத்தில் பிரிட்டனில் இரண்டு தேவாலயங்கள் யோகப் பயிற்சியை தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Webdunia
Publish Date: Mon, 21 Apr 2008 (17:42 IST)
Updated Date: Mon, 21 Apr 2008 (17:42 IST)