Publish Date: Fri, 18 Apr 2008 (20:17 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:17 IST)
சரப்ஜித் சிங்கிற்கு கருணை காட்ட வேண்டும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி விடுத்த வேண்டுகோளையடுத்து, தூக்கு தண்டனை நிறைவேற்றத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு பாகிஸ்தான் அரசு தள்ளிவைத்துள்ளது.
1990ஆம் ஆண்டு லாகூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட சரப்ஜித் சிங்கிற்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. கடந்த 17 ஆண்டுகளாக லாகூர் சிறையில் வாடும் சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனையை ஏப்ரல் 1ஆம் தேதி நிறைவேற்ற உத்தரவிடப்பட்டது.
ஆனால், இந்தியத் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு மாத காலத்திற்கு தண்டனை நிறைவேற்றம் தள்ளிவைக்கப்பட்டது. வரும் மே 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு இன்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், 17 ஆண்டுக்காலம் சிறையிலுள்ள சரப்ஜித் சிங்கிற்கு மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் அரசு கருணை காட்ட வேண்டும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிக்கை வெளியிட்டார்.
இதனையடுத்து தூக்கு தண்டனை நிறைவேற்றத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.