Publish Date: Sun, 13 Apr 2008 (17:53 IST)
Updated Date: Sun, 13 Apr 2008 (17:53 IST)
நேபாளத்தில் மன்னராட்சிக்கு முடிவுகட்டி முழுமையான ஜனநாயகத்திற்கு வித்திடும் புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கவுள்ள தேச சட்டப் பேரவையை தேர்வு செய்யும் தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.
நேபாள தேச சட்டப் பேரவைக்கு மொத்தமுள்ள 240 இடங்களில் இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 73 தொகுதிகளில் மாவோயிஸ்ட் கட்சி 43 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசண்டா தலைநகர் காட்மாண்டு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
முன்னாள் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவின் நேபாள காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும், நேபாள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
மாவோயிஸ்ட் கட்சி அருதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேபாளத்தில் 240 ஆண்டுகளாக நீடித்த மன்னராட்சிக்கு முடிவுகட்டும் இத்தேர்தலில் மன்னராட்சிக்கு ஆதரவான கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்துள்ளன.
முடிவுகள் அனைத்தும் வெளிவருவதற்கு 10 நாட்கள் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.