Publish Date: Thu, 10 Apr 2008 (13:53 IST)
Updated Date: Thu, 10 Apr 2008 (13:53 IST)
இலங்கையின் வடமுனை போர்க்களத்தில் மார்ச் மாதத்தில் மட்டும் 93 சிறிலங்க படையினர் கொல்லப்பட்டதுடன், 688 படையினர் படுகாயம் அடைந்துள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அதிகாரப் பூர்வவமாகத் அறிவித்துள்ளார்.
இது குறித்துச் சிறிலங்க நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அவர் கூறியதாக புதினம் இணைய தளம் தெரிவிப்பதாவது:
அமைச்சர் ஜெயராஜ் கடுமையான தாக்குதலில் கொல்லப்பட்டு உள்ளார். கிழக்கில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் முனைப்புடன் செயற்பட்டவர் அமைச்சர் ஜெயராஜ். அவர் படுகொலை செய்யப்பட்டாலும் அவரது பணியை நாம் தொடர்வோம்.
விடுதலைப் புலிகள் முல்லைத் தீவிலும், கிளிநொச்சியிலுமே உள்ளனர். அவர்கள் அங்கு மறைந்திருந்தபடி தாக்குதல்களை மேற்கொள்கின்றனர்.
வடக்கில் மறைந்துள்ள விடுதலைப் புலிகள் மீதான நடவடிக்கையில் வென்று அங்கு ஜனநாயகத்தை ஏற்படுத்துவோம். நோய் வாட்டினாலும் படையினர் மிகத் திறமையுடன் செயல்பட்டு வருகின்றனர்.
மார்ச் மாதம் மட்டும் 93 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 688 படையினர் படுகாயமடைந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.