Publish Date: Thu, 10 Apr 2008 (11:22 IST)
Updated Date: Thu, 10 Apr 2008 (10:59 IST)
இந்தோனேஷிய பணிப் பெண்களை சித்தரவதை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய தம்பதியினருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கவேண்டும் என்று வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாடினார்கள்.
அமெரிக்காவில் வாசனைத் திரவிய வர்த்தகம் செய்துவந்த வர்ஷா சப்னானி-மகேந்தர் தம்பதியினர் தங்கள் வீட்டு வேலைகளுக்காக இந்தோனேஷியாவைச் சேர்ந்த இரண்டு பணிப் பெண்களை நியமித்திருந்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் அந்த பணிப்பெண்களை இவர்கள் இருவரும் சித்தரவதை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர்கள் 6 வார விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிமன்ற விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கறிஞர்கள் வர்ஷாவிற்கு 30 ஆண்டுகால சிறைத் தண்டனையையும், கணவர் மகேந்தருக்கு 12 முதல் 15 ஆண்டுகால சிறைத் தண்டனையும் அளிக்க வேண்டும் என்று வாதாடினர்.
வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ஆர்தர் ஸ்பாட் வர்ஷாவிற்கு மே மாதம் 30 ஆம் தேதியும், மகேந்தருக்கு ஜூன் மாதம் 6ஆம் தேதியும் தண்டனை உத்தரவு பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.