Publish Date: Fri, 28 Mar 2008 (17:03 IST)
Updated Date: Fri, 28 Mar 2008 (17:02 IST)
சிறிலங்காவின் கிழக்கு மாகாணத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்க உள்ள தேர்தலின் மூலம் தமிழ் பேசுபவரை முதலமைச்சராக்கும் முயற்சியாக மூன்று தமிழ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
தமிழ் ஜனநாயக தேசிய கூட்டணி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணியில் தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பு, தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி, ஈழ மக்கள் புரட்சி விடுதலை முன்னணி ஆகிய மூன்று தமிழ் கட்சிகள் இணைந்துள்ளன.
தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் கூறுகையில், "மே 10-ம் தேதி நடக்க உள்ள வாக்குப் பதிவில் தமிழர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் முடிவடையும் நிலையில், கூட்டணியை மேலும் விரிவுபடுத்த ஈழ மக்கள் ஜனநாயக இயக்கம் உட்பட மற்ற தமிழ் கட்சிகளை இணைக்க பேச்சு நடத்தி வருகிறோம்" என்றார்.
தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன், தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி தலைவர் வி.ஆனந்தசங்கரி, ஈழ மக்கள் புரட்சி விடுதலை முன்னணி தலைவர் ஜி.ஸ்ரீதரன் ஆகியோர் நேற்று கூட்டணி ஒப்பந்தத்தை நிறைவேற்றினர்.
"13வது திருத்தத்தின்படி, சிறிலங்காவில் நிலவும் இன மோதல்களுக்கு தீர்வு காணுவதை மாகாணக்குழு முக்கிய அம்சமாக கொண்டுள்ளது. எனவே, கிழக்கு மாகாணக்குழுத் தேர்தலுக்குப்பிறகு தமிழ் பேசும் முதலமைச்சர் தான் வரவேண்டும்" என்று சித்தார்தன் மேலும் கூறினார்.
Webdunia
Publish Date: Fri, 28 Mar 2008 (17:03 IST)
Updated Date: Fri, 28 Mar 2008 (17:02 IST)