Publish Date: Fri, 28 Mar 2008 (12:55 IST)
Updated Date: Fri, 28 Mar 2008 (12:55 IST)
அமெரிக்காவில் அந்நாட்டு ராணுவத்துடன் நடந்த கூட்டுப் பயிற்சியின் போது இந்தியப் படையினர் இருவர் காணாமல் போயுள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
அவர்கள் இருவரின் நிலை பற்றிய தகவல் வேண்டி அமெரிக்க அரசை இந்திய அதிகாரிகள் தொடர்பு கொண்டுள்ளனர்.
அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடந்த வாரம் அந்நாட்டுப் படையினருடன் இந்தியப் படையினர் கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொண்டனர்.
இதில், எதிரியைத் தந்திரமாக வீழ்த்துவது பற்றிய பயிற்சியில் ஈடுபட்டிருந்த சஞ்சய் மஹதோ, சந்தோஷ் தாபா ஆகிய இரண்டு படையினரைக் காணவில்லை என்று இந்திய அயலுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து உடனடியாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரக் காவல்துறையினரைத் தொடர்புகொண்ட இந்திய அதிகாரிகள், காணாமல் போன இரண்டு படையினரையும் தேடித் தரும்படி புகார் அளித்துள்ளனர்.
இதுதவிர சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகமும் அமெரிக்க அரசைத் தொடர்புகொண்டு காணாமல் போன இந்தியப் படையினரின் நிலை பற்றி விளக்கம் கேட்டுள்ளது.
இதற்கிடையில், அடுத்த ஆண்டு பெல்காமில் இந்திய- அமெரிக்க கடற்படையினர் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.