Publish Date: Thu, 27 Mar 2008 (20:27 IST)
Updated Date: Thu, 27 Mar 2008 (20:26 IST)
அமெரிக்காவின் எச்2பி விசா முறையை கைவிடக்கோரி, 100 அமெரிக்கவாழ் இந்திய தொழிலாளர்கள் நியூ ஆர்லன்சிலிருந்து வாஷிங்டன் வரையிலான 1,500 கி.மீ. தூரம் நடைப்பயணம் மேற்கொண்டனர்.
மிசிசிப்பியில் உள்ள சிக்னல் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் பணிபுரிந்த இந்திய தொழிலாளர்கள் தவறாக நடத்தப்பட்டதற்காக கடந்த 6ம் தேதி நிறுவனத்தை விட்டு வெளியேறினர். இதுகுறித்து விளக்கமளிக்க பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலத்தை துவக்கிய இந்திய தொழிலாளர்கள் இன்று வாஷிங்டன் வந்தடைந்தனர்.
"இந்த நவீனகால அடிமை முறையை கைவிடக்கோரி நாங்கள் வாஷிங்டன் வரை 'சத்யாகிரகம்' மேற்கொண்டோம்" என்று சிக்னல் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சாபுலால் விஜயன் தெரிவித்தார்.
"தொந்தரவுகளை தாங்கும் அளவுக்கு போதிய மன பலத்தையும் நாங்கள் பெற்றுள்ளோம். அமெரிக்க அரசின் எச்2பி தொழிலாளர்கள் விசா முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது. இதனால், எங்களை போன்ற தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்திய தூதரக அதிகாரி ரோனன் சென்-னை சந்தித்து, இதுகுறித்து இந்திய-அமெரிக்க அரசுகளிடையே உயர்மட்ட அளவிலான பேச்சு நடத்த வலியுறுத்த உள்ளோம்" என்றார் சாபுலால் கூறினார்.
ஆயிரத்து 500 கி.மீ. பயணம் மேற்கொண்ட போது அமெரிக்க குடியேற்ற அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாகினோம். அதனால் தான் ஒருநாள் காலதாமதமாக வாஷிங்டன் வந்தடைந்தோம் என்று தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.