Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூடானில் வாக்குப்பதிவு துவங்கியது: மன்னராட்சிக்கு முடிவு!

பூடானில் வாக்குப்பதிவு துவங்கியது: மன்னராட்சிக்கு முடிவு!
, திங்கள், 24 மார்ச் 2008 (12:15 IST)
பூடானின் முதல் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியுள்ளது. இத்தேர்தலின் மூலம், 100 ஆண்டுகால மன்னராட்சிக்கு முடிவு கட்டப்பட்டு மக்களாட்சி மலர இருக்கிறது.

இந்திய முதன்மை தேர்தல் ஆணையர் கோபாலசாமி உட்பட சர்வதேச பார்வையாளர்களின் கண்காணிப்பில், 47 மக்களவை பிரதிநிதிகளுக்கான தேர்தல் துவங்கியுள்ளது. இத்தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பூடான் ஐக்கிய கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

'இத்தேர்தல் நமது அனைவருக்கும் வரலாற்று சிறப்புமிக்கது. தேர்தல் சுமுகமாக நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன' என்று பூடான் முதன்மை தேர்தல் ஆணையர் குன்சாங் வாங்டி கூறினார்.

இந்திய நேரப்படி, காலை 8.30 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. நாடுமுழுவதிலும் 3 லட்சத்து 18 ஆயிரத்து 465 பேர் வாக்களிப்பதற்கு ஏதுவாக 865 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்களை இந்தியா வழங்கியுள்ளது.

பூடான் தேர்தலில் 'யாரும் ஓட்டுப்போடக்கூடாது' என்று மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அச்சுறுத்தியுள்ள நிலையில், பலத்த பாதுகாப்புக்கு இடையே தேர்தல் நடந்து வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ராணுவம், காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாலை 4.30 மணியுடன் முடிவடையும் இத்தேர்தலில் பதிவான வாக்குகள் மாலையே எண்ணப்படுகிறது. இதனால், இன்று இரவுக்குள் முடிவுகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

பூடானின் கடைசி மன்னரான ஜிக்மி சிங்கி வாங்சக் ஜனநாயக ஆட்சி அமைய ஆட்சி பொறுப்பை அமைச்சர்கள் குழுவிடம் ஒப்படைத்தார். புதியதாக தேர்ந்தெடுக்கப்படும் புதிய அரசின் மூலம் பூடானில் மக்களாட்சி துவங்க இருக்கிறது. இதன்மூலம், வரலாற்றில் முக்கிய நிகழ்வாக இன்றைய தேர்தலும் இடம் பெறுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil