Publish Date: Sun, 23 Mar 2008 (14:02 IST)
Updated Date: Sun, 23 Mar 2008 (14:01 IST)
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவர் யூசஃப் ராசா கிலானியை பிரதமர் வேட்பாளராக அக்கட்சி அறிவித்துள்ளது!
நேற்று இரவு நடைபெற்ற பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் கணவர் ஆசிஃப் அலி ஜர்தாரி பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாததால் அப்பதவிக்கு தேர்ந்தெடுப்பதில் சட்ட ரீதியாக சிக்கல் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதனையடுத்து, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவரும், பாகிஸ்தான் நாடாளுமன்ற முன்னாள் அவைத் தலைவருமான யூசஃப் ராசா கிலானி பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நவாஸ் ஷெரீஃப் கட்சியும் பாகிஸ்தான் மக்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளதால், நாளை நடைபெறவுள்ள தேர்தலில் யூசஃப் ராசா கிலானி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.