Publish Date: Wed, 19 Mar 2008 (12:26 IST)
Updated Date: Wed, 19 Mar 2008 (12:25 IST)
திபெத் தலைநகர் லாசாவில் நடந்த கலவரம் தொடர்பாக 105 பேர் காவல் துறையினரிடம் சரணடைந்ததாக சீனா தெரிவித்துள்ளது.
கலவரக்காரர்கள் தாங்களாகவே வந்து சரணடைய திங்கள்கிழமை நள்ளிரவு வரை திபெத் அரசு கெடு விதித்திருந்தது. அவ்வாறு சரணடையாவிட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், சரணடைந்தவர்களுக்கு கருணை காட்டப்படும் என்றும் உறுதி கூறியிருந்தது.
இதையடுத்து, கலவரத்தின் போது தாக்குதலில் ஈடுபட்டவர்கள், கடைகளில் பணம் உள்ளிட்ட பொருள்களை கொள்ளையடித்துச் சென்றவர்கள் உள்பட பலர் சரணடைந்துள்ளதாகவும், அவர்களில் சிலர் தாங்கள் கொள்ளையடித்த பணத்தை திருப்பி கொடுத்திருப்பதாகவும் திபெத் பிராந்திய அரசின் துணைத் தலைவர் பேமா சிலேன் கூறினார்.
முதல்கட்ட விசாரணையில், இந்த கலவரத்தின் போது, குறைந்த பட்சம் 373 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 32 நிறுவனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், பல கோடி ரூபாய் அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் புத்த பிட்சுகளும், மக்களும் விடுதலைகோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை இந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் சீன பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 13 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.