Publish Date: Fri, 14 Mar 2008 (13:52 IST)
Updated Date: Fri, 14 Mar 2008 (13:17 IST)
திபெத்தில் சீன அடக்கு முறைக்கு எதிரான போராட்டங்கள் அதிகமாகியுள்ளதால் சீனா அங்கு பலத்த கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அடக்கு முறைகளை எதிர்க்க திபெத்தில் உள்ள பெளத்தத் துறவிகள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
திபெத் தலைநகர் லாசாவிற்கு வெளியே அமைந்திருக்கும் டிரேபங் பவுத்த மடாலயத்தைச் சேர்ந்த இரண்டு துறவிகள் தங்கள் மார்பு, கைகள் மற்றும் மணிக்கட்டுகளை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.
இந்த துறவிகளின் உடல் நிலை இன்னமும் கவலைக்கிடமாகவே உள்ளது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கால்சங், டாம்சோ என்ற இந்த பெளத்தத் துறவிகள் மருத்துவமனைக்கு வர மறுப்பு தெரிவித்ததால் மடாலயத்திலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீன அடக்குமுறைக்கு எதிராக திபெத்தியர்களுக்கு இருக்கும் கோபத்தை பிரதிபலிப்பதக இந்த தற்கொலை முயற்சிகள் இருப்பதாக ரேடியோ ஃப்ரீ ஆசியா கூறியுள்ளது.
மேலும் தலைநகர் லாஸாவிற்கு அருகே மலை மேல் உள்ள கேன்டன் பவுத்த மடாலயத்தில் பவுத்த துறவிகள் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மடாலயத்திற்கு ஆயுதம் ஏந்திய துணை ராணுவப்படையினர் அனுப்பப்பட்டுள்ளதை எதிர்த்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுவதாக தெரிகிறது.
பீஜிங் ஒலிம்பிக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து வட இந்தியாவின் எல்லைப்புறங்களிலிருந்து திபெத்திற்குள் நுழைய முயன்ற நூற்றுக்கணக்கான திபெத்தியர்களை இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் செல்லவிடாமல் நிறுத்தியுள்ளனர்.
தர்மசாலாவில் உள்ள காங்ரா மாவட்டத்தில் உள்ள திபெத்தியர்கள் தங்கள் நாட்டிற்கு செல்ல இந்திய அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
திபெத் தலை நகர் லாசாவில் திபெத்தியர்கள், பெளத்த துறவிகளின் சீன எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருக்க மூத்த அரசு அதிகாரிகளை நியமித்து திபெத் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல் எந்த பெளத்த மடாலயங்களில் போராட்டம் நடைபெறுகிறதோ அங்கு பொது மக்கள் செல்ல முடியாவண்ணம் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Webdunia
Publish Date: Fri, 14 Mar 2008 (13:52 IST)
Updated Date: Fri, 14 Mar 2008 (13:17 IST)