Publish Date: Fri, 07 Mar 2008 (11:21 IST)
Updated Date: Fri, 07 Mar 2008 (11:21 IST)
மேற்கு ஜெருசலேம் பகுதியில் உள்ள யூத மத போதனைக் கூடத்தில் நேற்று இரவு துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
மெர்காஸ் ஹராவ் யெஷிவா மத போதனைக் கூடத்தில் நேற்று சிறப்பு வழிபாட்டுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தினுள் நுழைந்த ஒருவன் தனது துப்பாக்கியால் சரமாரியாக சுடத் துவங்கினான். இதில் 8 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பு செய்திகள் கூறுகின்றன.
பிறகு அந்த கொலைகாரனும் சட்ட அமலாக்க பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்த கொலைகாரன் பாலஸ்தீனர்கள் பெரும்பான்மை வகிக்கும் கிழக்கு ஜெருசலேம் பகுதியிலிருந்து வந்தவன் என்று இஸ்ரேல் காவல்துறையினர் கூறுகின்றனர்.
இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு கலிலீ விடுதலைப் படையினர் பொறுப்பேற்றுள்ளதாக லெபனானின் ஷியா ஆதரவு தொலைக்காட்சி சானல் ஒன்று தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்ட இமாத் முக்னியே என்ற தீவிரவாதியின் ஆதரவாளர்கள் இந்த தாக்குதலை செய்ததாக இஸ்ரேல் காவல் துறையினர் இன்னமும் உறுதி செய்யவில்லை.