சிறிலங்கா ராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆறு நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார்.
இந்தப் பயணத்தின் போது இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ள சரத் பொன்சேகா, இலங்கை நிலவரம் குறித்து விளக்குவதுடன், இந்தியாவிடம் இருந்து ராணுவத் தளவாடங்களை சிறிலங்க ராணுவத்திற்குக் கொள்முதல் செய்வது பற்றி பேச்சுக்களையும் நடத்துவார்.
தலைநகர் டெல்லியில் நாளை சரத் பொன்சேகாவிற்கு இந்திய ராணுவத்தின் "செளத் பிளாக்" ராணுவத் தளத்தில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்படுகிறது. அதன் பின்னர் இந்தியா கேட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ராணுவத்தினரின் சமாதிக்கு சரத் பொன்சேகா மரியாதை செலுத்தவுள்ளார்.
சரத் பொன்சேகாவின் இந்தியப் பயணம் குறித்து இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது இந்திய-சிறிலங்கா கடல் எல்லைகளில் இருநாட்டுக் கடற்படையினரும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் குறித்த புலனாய்வுத் தகவல்களும் பரிமாறப்படுகின்றன என்றார் என்று புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
மேலும், "விடுதலைப் புலிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் சிறிலங்க ராணுவத்தினர் பின்தங்குவதை இந்தியா விரும்பவில்லை. இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் மந்தம் ஏற்படக் கூடாது" என்று அவர் கூறியுள்ளார்.