அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பாகிஸ்தானிற்குள் நுழைந்து பயங்கரவாதிகளைத் தாக்குவோம் என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பாரக் ஒபாமா கூறினார்.
அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனிற்கும் பாரக் ஒபாமாவிற்கும் இடையில் ஒஹியோ மாகாணத்தில் நடந்த விவாதத்தில் "அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகளைத் தாக்குவோம்" என்றார் ஒபாமா.
மேலும், "நான் எப்போதும் பாகிஸ்தானில் குண்டு வீசுவேன் என கூறியதில்லை. அங்குள்ள பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அரசு கைது செய்தாலும், இல்லாவிட்டாலும் நாம் அவர்களை கண்டிப்பாக கைது செய்ய வேண்டும் என்றுதான் கூறுகிறேன். பயங்கரவாதத்தை ஒழிக்க முஷாரஃப் ஒத்துழைப்பார் என நம்புகிறேன்.
அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் என்றால் அது எந்த நாடாக இருந்தாலும் அங்கு தாக்குதல் நடத்துவோம். இதில் பாகிஸ்தான், ஈராக் என்ற வேறுபாடு எல்லாம் இல்லை. ஒரு அதிபரால் தம் மக்களை காக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுப்பேன். என்னுடைய முடிவு எப்போதும் அமெரிக்கர்களுக்கு சாதகமாகத்தான் இருக்கும்" என்றார் ஒபாமா.