அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்யும் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை பாரக் ஒபாமா தொடர்ந்து பின்னுக்குத் தள்ளி வருகிறார்.
இந்த ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதி நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது. இதில், ஆளும் கட்சியான குடியரசுக் கட்சி, எதிர்க் கட்சியான ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டிற்குள்ளும் கடுமையான போட்டி நிலவுகிறது.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும், முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரிக்கும், அமெரிக்க ஆப்பிரிக்கரான பாரக் ஒபாமாவுக்கும் இடையில் நேரடியான மோதல் ஏற்பட்டுள்ளது.
பல்வேறு மாகாணங்களில் நடந்த வாக்கெடுப்பில் ஹிலாரியும், ஒபாமாவும் சம பலத்துடன் இருந்து வந்த நிலையில், சமீபத்திய தேர்தல்களில் ஹிலாரியை பின்னுக்குத் தள்ளி ஒபாமா முன்னேறி வருகிறார்.
புதன்கிழமை வெளியான விஸ்கான்சின், ஹவாய் மாகாணங்களின் தேர்தல் முடிவுகளும் ஒபாமாவுக்கு சாதகமாக அமைந்துள்ளன. ஹிலாரியின் கோட்டை என்றழைக்கப்பட்ட விஸ்கான்சின் மாகாணம், தனது சொந்த மாகாணமான ஹவாய் ஆகிய இரண்டிலும் ஒபாமா வெற்றிபெற்றுள்ளார்.
இதனால் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள ஹிலாரி மார்ச் 4-ம் தேதி நடைபெறும் ஒகியோ, டெக்ஸாஸ் மாகாணங்களின் தேர்தலின் முடிவுகளை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார். வெள்ளை இன மக்கள் அதிகம் நிறைந்துள்ள இந்த மாகாணங்களில் ஹிலாரிக்கு செல்வாக்கு இருப்பதாக கூறப்பட்டாலும், ஒபாமாதான் வெற்றி பெறுவார் என்று நம்பப்படுகிறது.
ஆளும் குடியரசு கட்சியில் ஜான் மெக்கைன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். விஸ்கான்சின் மாகாண தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்த இடத்தில் மைக் ஹக்கபீயும், 3-வது இடத்தில் ரோன் பௌலும் உள்ளனர்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மீது அமெரிக்கர்கள் நம்பிக்கை இழந்துள்ள சூழலில், அடுத்த அதிபர் எதிர்க் கட்சியான ஜனநாயகக் கட்சியிலிருந்து தான் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.