Publish Date: Tue, 19 Feb 2008 (15:10 IST)
Updated Date: Tue, 19 Feb 2008 (15:09 IST)
பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர். இதுவரை நடந்துள்ள வாக்கு எண்ணிக்கையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி 84 இடங்களைக் கைப்பற்றி முதலிடத்திலும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) 63 இடங்களைக் கைப்பற்றி 2 வது இடத்திலும் உள்ளனர். அதிபர் முஷாரஃப் ஆதரவாளர்கள் படுதோல்வியைச் சந்தித்துள்ளனர்.
இன்று மதியம் 2.00 மணி நிலவரப்படி பெனாசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 84 இடங்களிலும், நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) 63 இடங்களிலும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் ( குலாதி இ ஆசம்) 36 இடங்களிலும், முத்தாதா குவாமி இயக்கம் 19 இடங்களிலும், அவாமி தேசியக் கட்சி 10 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி (எஸ்) 1 இடத்திலும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (எஃப்) 4 இடங்களிலும், சுயேட்சைகள் 21 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
பாகிஸ்தானில் தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 137 உறுப்பினர்கள் தேவை. தேர்தல் முடிவுகளின்படி எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது.
தேர்தலில் முஷாரஃப் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ), மறைந்த பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) ஆகிய 3 கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.
அமைச்சர்கள் படுதோல்வி!
முஷாரஃப் ஆதரவாளர்களில் முக்கியத் தலைவர்களாகவும், அமைச்சர்களாகவும் இருந்த பலர் படுதோல்வி அடைந்துள்ளனர்.
பஞ்சாப் தொகுதியில் போட்டியிட்ட பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ) கட்சித் தலைவர் சவுத்திரி சுஜத் ஹூசைனை, பெனாசிர் கட்சி வேட்பாளர் சவுத்திரி அகமது முக்தார் தோற்கடித்தார். இதனால் முஷாரஃப் ஆதரவாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ) கட்சியின் தலைவர்களில் ஒருவர் கூறுகையில், "தேர்தல் முடிவை நம்ப முடியவில்லை. கடும் அதிர்ச்சியாக உள்ளது'' என்றார்.
ராவல்பிண்டி தொகுதியில் 7 தடவை வெற்றி பெற்றவரும், முஷாரஃப்பின் நம்பிக்கைக்கு உரியவருமான ஷேக் ரசீத் அகமதுவும் படுதோல்வியை சந்தித்தார். முஷாரஃப்பின் வலதுகரம் என்று வர்ணிக்கப்படும் ஜூபைதா ஜலால், செக்வடார் தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரிடம் தோற்றார்.