Publish Date: Wed, 06 Feb 2008 (20:04 IST)
Updated Date: Wed, 06 Feb 2008 (20:03 IST)
ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பாகிஸ்தான் ராணுவத் துணைத் தளபதி உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் மி-17-இல் ராணுவத் துணைத் தளபதி ஜாவேத் சுல்தான் தலைமையில் ராணுவ அலுவலர்கள் மற்றும் வீரர்கள் சென்றனர். தெற்கு வஜிரிஸ்தான் பகுதிக்குட்பட்ட வானா மற்றும் ஜன்டோலா இடையே பறந்துகொண்டிருக்கும்போது ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. ஆனால், தீவிரவாதிகளின் நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதால் தரையிறக்கப்படவில்லை.
இந்நிலையில், தனாய் பகுதியில் பிற்பகல் 2.40 மணிக்கு ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது. அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.
விபத்து நடந்த பகுதிக்கு மீட்பு ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விபத்தில் அப்சல் சீமா, உமர் ஃபரூக் ஆகிய ராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர் என்று ராணுவ செய்தித்தொடர்பாளர் அத்தார் அப்பாஸ் கூறினார்.