சிறிலங்காவில் இன்று அதிகாலை பயணிகள் பேருந்து ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் 20 பேர் கொல்லப்பட்டதுடன் 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
சிறிலங்காவின் மாத்தளை மாவட்டத்தில் உள்ள தம்புள்ள பேருந்து நிலையத்தில், இன்று காலை 7.15 மணிக்கு நின்றிருந்த தனியார் பேருந்து ஒன்றின் சரக்குப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில், 20 பேர் கொல்லப்பட்டதுடன், 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
குண்டுவெடிப்பில் பேருந்து முற்றிலும் உருக்குலைந்ததால், காயமடைந்தவர்களைம் பலியானவர்களையும் மீட்பதில் சிக்கல்கள் ஏற்பட்டதாக் காவலர்கள் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான பேருந்ததில், அனுராதபுரம் ருவன்வெலிசரவில் இன்று நடக்கவிருந்த சமய வழிபாடு ஒன்றில் கலந்துகொள்பவர்கள் அதிகமாகப் பயணித்துள்ளனர். கண்டியில் இருந்து அனுராதபுரம் செல்லும் வழியில் தம்புள்ளவிற்கு வந்தத இப்பேருந்தில் 70-க்கும் அதிகமான பயணிகள் இருந்தனர் என்றும் காவல் அதிகாரிகள் கூறினர்.
படுகாயமடைந்தவர்கள் உடனடியாக தம்புள்ள, குருநாகல், கண்டி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சம்பவம் குறித்து ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறுகையில், "தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொல்லப்பட்டவர்களில் 15 பேர் பெண்கள் ஆவர். காயமடைந்த 50-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.