Publish Date: Mon, 28 Jan 2008 (19:09 IST)
Updated Date: Thu, 06 Mar 2014 (21:35 IST)
ஆஃப்கானிஸ்தானில் காவல் துறையினருடன் நடந்த மோதலில் 8 தலிபான்கள் கொல்லப்பட்டதுடன் 10 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
தெற்கு ஆஃப்கானிஸ்தானின் உருஸ்கான் மாகாணத்தில் காவல் துறையினருக்கும் தலிபான்களுக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய மோதல் இன்று காலை வரை நீடித்தது.
மோதல் நடந்த திஹரவுத் மாவட்டம் மலைகள் நிறைந்த பகுதி என்பதால், காவலர்களுக்கு ஏராளமான இடையூறுகள் ஏற்பட்டன. இறுதியில் தாக்குதலை சமாளிக்க முடியாத தலிபான்கள் பின்வாங்கினர்.
இம்மோதலில் உயிரிழந்த 8 தலிபான்களின் உடல்களையும் கைப்பற்றி விட்டதாகவும், காயமடைந்த தலிபான்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் உருஸ்கான் மாகாண காவல்துறை உயர் அதிகாரி ஜுமா குல்ஹிமத் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே 2007 முதல் நடந்து வரும் மோதலில் இதுவரை 6,500பேர் பலியாகியுள்ளனர் என்று அந்நாட்டு அரசு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.