Publish Date: Thu, 24 Jan 2008 (17:44 IST)
Updated Date: Thu, 24 Jan 2008 (17:44 IST)
மேற்கு வங்கத்தில் பரவியுள்ள பறவைக் காய்ச்சல் காரணமாக இந்தியக் கோழிகளை இறக்குமதி செய்வதற்கு சிறிலங்கா அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவில் பல பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது என்ற தகவல் கிடைத்தவுடன், இந்திய இறைச்சிக் கோழிகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்ததாக சிறிலங்கா அரசின் கால்நடை பராமரிப்புத் துறையின் உயரதிகாரி கேந்திரகாமா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் பறவைக் காய்ச்சல் ஒழிக்கப்பட்டு விட்டது என்று அதிகாரபூர்வமாக தெரிந்த பிறகு இந்த தடை விலக்கிக் கொள்ளப்படும். பறவைக் காய்ச்சல் காரணமாக குறிப்பிட்ட ஐரோப்பிய நாடுகளிலிருந்து கோழி சம்பந்தப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் சிறிலங்கா அரசு தடை விதித்துள்ளது" என்று கூறியுள்ளார்.
இந்தியாவிலிருந்து முட்டை பவுடரையும், இறைச்சிக் கோழிகளையும் சிறிலங்கா இறக்குமதி செய்து வந்தது.