Publish Date: Wed, 23 Jan 2008 (17:51 IST)
Updated Date: Wed, 23 Jan 2008 (17:47 IST)
விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சர்வதேச நாடுகள் கொடுத்துவரும் நெருக்கடிகள் சிறிலங்க அரசின் நடவடிக்கைகளுக்கு உதவியாக உள்ளது என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று அயல்நாட்டுப் பிரதிநிதிகளிடம் பேசிய மகிந்த ராஜபக்ச இதைத் தெரிவித்ததாக பி.டி.ஐ. செய்தி தெரிவிக்கிறது.
மேலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிடிபட்டால், அவரை ராஜிவ் காந்தி படுகொலை வழக்கு விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைக்கப் போவதாகவும், இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தடை விதிப்பதற்கான தேவை ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் நிறைந்துள்ள பகுதிகளில் அயல்நாட்டுப் பிரதிநிதிகளை அனுமதிப்பதற்கு சிறிலங்க அரசு தயங்குவது குறித்துக் கேட்டதற்குப் பதிலளிக்க மறுத்த ராஜபக்ச, "இந்தியப் பிரதிநிதிகள் விரும்பினால் அங்கு செல்ல முடியும்" என்றார்.
விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சர்வதேச நாடுகள் கொடுத்துவரும் நெருக்கடிகள், குறிப்பாக புலிகள்தான் உலகிலேயே மிகவும் பயங்கரமானவர்கள் என்று அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. அறிவித்தது சிறிலங்க அரசின் நடவடிக்கைகளுக்கு மகிவும் உதவியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.