Publish Date: Tue, 22 Jan 2008 (14:49 IST)
Updated Date: Tue, 22 Jan 2008 (14:49 IST)
பாகிஸ்தான் பொதுத் தேர்தல் முறைகேடுகள் இன்றி வெளிப்படையாக நடக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களிடம் அந்நாட்டு அதிபர் பர்வேஷ் முஷாரஃப் உறுதி அளித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முஷாரஃப், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் பேசுகையில், "பாகிஸ்தான் தேர்தலில் முறைகேடு நடக்க விடமாட்டேன். தேர்தல் முறையாக நேர்மையாக, அமைதியாக நடக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். தேர்தலை சீர்குலைக்க முயற்சி செய்யும் சக்திகளை முறியடிப்போம்" என்றார்.
மேலும், "தேர்தலை கண்காணிக்க வெளிநாட்டு பார்வையாளர்கள் தாராளமாக வரலாம். அவர்களை தடுக்க விரும்பவில்லை. தேர்தல் ஒழுங்காக நடப்பதை அவர்கள் கண்காணிக்கலாம். ஐரோப்பிய ஒன்றியம் தனது குழுவை அனுப்பி வைக்கலாம். அரசியல் நிலைத்தன்மை உறுதி செய்யப்பட்டு, ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கு அனைவரும் உதவ வேண்டும்" என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பெனாசிர் படுகொலை வழக்கு விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய முஷாரஃப், விசாரணை முடிந்ததும் அதன் விவரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படும் என்று உறுதியளித்தார்.