Publish Date: Tue, 22 Jan 2008 (11:36 IST)
Updated Date: Tue, 22 Jan 2008 (11:36 IST)
''பயங்கரவாதத்திற்கு எதிராக போர் நடத்தும் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு நாங்கள் எந்த நெருக்கடியையும் தரவில்லை'' என்று அமெரிக்கா மறுத்துள்ளது.
பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் அல் கய்டா பயங்கரவாதிகளையும், தீவிரவாதிகளையும் ஒழிப்பதற்காக தனது படைகளை அமெரிக்கா அனுப்பக் கூடும் என்ற தகவலும், அவ்வாறு அமெரிக்கா தனது படைகளை அனுப்பினால் அது ஊடுருவலாகவே கருதப்படும் என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப்பும் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுகுறித்து ஆஃப்கானிஸ்தான் வந்திருந்த அமெரிக்க அயலுறவு இணையமைச்சர் ரிச்சர்ட் பவுச்சர் கூறுகையில், "பாகிஸ்தான் அவர்களின் நாடு, அவர்களின் பிரச்சனை, இதனால் அவர்களின் வழியில் சென்று அவர்களுக்கு உதவுவோமே தவிர நெருக்கடி தர மாட்டோம்"என்றார்.
"பயங்கரவாதம் எங்களையும் பாதிக்கிறது, உங்களையும் பாதிக்கிறது, பாகிஸ்தானையும் பாதிக்கிறது. இதனால் இந்தப் பிரச்சனைக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
பொதுமக்கள் அனைவரும் அமைதியாக வாழ வேண்டும் என்றே நாம் அனைவரும் விரும்புவோம். வெடிகுண்டு கலாச்சாரமும், வன்முறைக் கலாச்சாரமும் முடிவுக்கு வரவேண்டும்." என்றார் பவுச்சர்.