Publish Date: Mon, 21 Jan 2008 (17:37 IST)
Updated Date: Mon, 21 Jan 2008 (17:37 IST)
மலேசியாவில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டுள்ள ஹிண்ட்ராஃப் தலைவர்கள் 5 பேரும் திட்டமிட்டபடி சிறையில் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினர்.
மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவழியினருக்குச் சம உரிமை கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி, தலைநகர் கோலாலம்பூரில் நடந்த பேரணியில் பங்கேற்றவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர்.இந்தப் பேரணியை தேசத்திற்கு எதிரான சதிச்செயல் என்று மலேசிய அரசு வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து அப்பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்த ஹிண்ட்ராஃப் அமைப்பின் நிர்வாகிகளான பி.உதயகுமார், வி.கணபதிராவ், டி.வசந்தகுமார், ஆர்.கங்காதரன், எம்.மனோகரன் ஆகிய 5 பேர், டிசம்பர் 13 ஆம் தேதி உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
தற்போது தாய்பிங் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேரும் தங்கள் மீதான நடவடிக்கையைக் கண்டித்து இன்று முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினர்.
சிறையில் ஹிண்ட்ராஃப் தலைவர்கள் உண்ணாவிரதம் தொடங்கியுள்ள நிலையில், அவர்களின் ஆதரவாளர்கள் இரண்டு கோவில்களில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். இதில், வழக்கறிஞர்கள், ஹிண்ட்ராஃப் தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டப்படி 5 பேரையும் எந்தவித விசாரணையும் இன்றி 2 ஆண்டுகள் சிறையில் வைத்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.