Publish Date: Mon, 14 Jan 2008 (18:31 IST)
Updated Date: Mon, 14 Jan 2008 (18:28 IST)
பாகிஸ்தானில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலன்று வன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டவுடன் சுட்டுத் தள்ளுமாறு அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் வருகிற பிப்ரவரி 18 ஆம் தேதியன்று பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இத்தேர்தல் முறைகேடுகள் இன்றி அமைதியாகவும், வெளிப்படையாகவும் நடக்கும் என்று முஷாரஃப் கூறியுள்ளார்.
இந்நிலையில், தேர்தலன்று போராட்டங்கள் நடத்துவதற்கும், எதிர்ப்புத் தெரிவித்து முழக்கங்களை எழுப்புவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தேர்தலைச் சீர்குலைக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டவுடன் சுட்டுத் தள்ளுமாறு பாதுகாப்புப் படையினருக்கு முஷாரஃப் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, 'தேர்தலுக்கு முன்பும் பின்பும், அமைதியை நிலைநாட்டிச் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கப்பதற்காக நாடு முழுவதும் ராணுவம் குவிக்கப்படும்' என்று முஷாரஃப் அறிவித்தும், 'தேர்தல் மூலம் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்குப் பதிலாக, அதற்குப் பின்னரும் ராணுவ ஆட்சியை நீடிக்கச் செய்யவே முஷாரஃப் விரும்புகிறார்' என்று அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம்சாற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.