Publish Date: Tue, 08 Jan 2008 (13:07 IST)
Updated Date: Tue, 08 Jan 2008 (13:07 IST)
சிறிலங்காவில் ராணுவத்தின் முப்படையினரும் காவல் துறையினர் உடனில்லாமல் பொதுமக்களின் வீடுகளைச் சோதனையிடக் கூடாது என்று அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சிறிலங்கா தலைநகர் கொழும்புவில், அத்தியாவசியத் தேவைகள் இல்லாத போது, இரவு 9.00 மணியில் இருந்து காலை 6.00 மணி வரை பொது மக்களின் வீடுகளுக்குள் புகுந்து சோதனையிடக் கூடாது என்றும் உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
கொழும்புவில் வீதிகளில் நடமாடும் பொதுமக்களை நிறுத்திச் சோதனையிடுவது சட்ட விரோதமானது என்று உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது, இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சரத் என்.சில்வா, பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலர் கோத்தபய ராஜபக்சேவுக்கு வழங்கிய உத்தரவில் கூறியிருப்பதாவது:
படையினரோ அல்லது கடற்படையினரோ அல்லது விமானப் படையினரோ தன்னிச்சையாகப் பொதுமக்களின் வீடுகளைச் சோதனையிட முடியாது. அதற்கு அனுமதியளிக்கவும் கூடாது.
அத்தியாவசிய காரணத்துடன் வீடுகளைச் சோதனையிட வேண்டுமானால், அதற்கு முன்னர் அந்த வீடுகள் அமைந்துள்ள பகுதிக்குரிய காவல் நிலைய அதிகாரியின் அனுமதியைப் பெற்று, அந்த காவல் நிலைய காவலர்களுடனேயே குறிப்பிட்ட வீடுகளுக்குச் செல்ல வேண்டும்.
அத்தியாவசிய காரணங்கள் இல்லாமல், இரவு 9:00 மணி முதல் காலை 6:00 மணிவரை பொதுமக்களின் வீடுகளுக்குள் செல்லக்கூடாது.
கொழும்பில், நேற்று கைது செய்யப்பட்டவர்கள் யாராவது இன்னும் விடுதலை செய்யப்படாமல் இருந்தால், அவர்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி, அவர்கள் குற்றமற்றவர்கள் எனில் உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு தலைமை நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
Webdunia
Publish Date: Tue, 08 Jan 2008 (13:07 IST)
Updated Date: Tue, 08 Jan 2008 (13:07 IST)