Publish Date: Fri, 04 Jan 2008 (17:56 IST)
Updated Date: Fri, 04 Jan 2008 (17:56 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பைப் பெறுவதற்கு நடந்த வாக்கெடுப்பில் ஹிலாரி கிளிண்டன் தோல்வியடைந்தார். இது அமெரிக்க அரசியலில் அதிரடித் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கான தேர்தல் பிரச்சாரம் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.
அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாங்கள் சார்ந்த கட்சியினரின் ஒப்புதலைப் பெறுவதுடன், மாகாணம் வாரியாக நடக்கம் வாக்கெடுப்பிலும் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்பது அங்குள்ள தேர்தல் நடைமுறையாகும்.
இதன்படி அயோவா மாகாணத்தில் வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டன், பாரக் ஒபாமா உள்படப் பலர் போட்டியிட்டனர்.
இததேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கு 30 விழுக்காடு வாக்குகளும், ஒபாமாவுக்கு 38 விழுக்காடு வாக்குகளும் கிடைத்தன.
கருப்பினத்தவரான பாரக் ஒபாமாவின் இந்த வெற்றி, அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஹிலாரி ஆதரவாளர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயோவா மாகாணநிலவரத்தைப் பொறுத்தே மற்ற மாகாணங்களின் வாக்குப் பதிவு அமையும் என்பதால், அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு ஹிலாரிக்குக் கிடைப்பது சந்தேகமாகியுள்ளது.
குடியரசுக் கட்சி சார்பில் ஹக்காபி வெற்றிபெற்றுள்ளார். இவர் மத போதகராக இருந்து அரசியல்வாதியானவர் என்பது குறிப்பிடத்தக்கது.