Publish Date: Thu, 03 Jan 2008 (12:13 IST)
Updated Date: Thu, 03 Jan 2008 (12:13 IST)
ஆஸ்ட்ரேலியாவில் உள்ள மெல்போஃர்ன் நகரில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 இந்திய மாணவர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்.
மெல்போஃர்னின் வட பகுதியில் புட்ஸ்கேரேயில் உள்ள பலாராட் சாலையில் அமைந்துள்ள வீட்டில் இன்று அதிகாலை பிடித்த தீ அங்கிருந்த படுக்கை அறையில் வேகமாக பரவியது. இதில் அந்த வீட்டில் இருந்த 22, 24, 30 வயதான மூன்று இந்திய மாணவர்கள் சிக்கி உயிரிழந்தனர் என்று காவல்துறை அதிகாரி ராடு ஸ்டார்மந்த் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த 3 பேரில் இரண்டு பேரின் உடல்கள் வீட்டின் பின்பக்கத்திலும், ஒருவரின் உடல் வரவேற்பறையிலும் கிடந்ததாக அவர் மேலும் கூறியுள்ளார். நள்ளிரவு ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இருந்து 5 வயது குழந்தை உள்ளிட்ட ஒரு குடும்பம் பாதுகாப்பாக தப்பியுள்ளனர்.
ஆஸ்ட்ரேலியாவில் இறந்து போன மூன்று மாணவர்களும் கடந்த 2 ஆண்டுகளாக அங்கு தங்கி படித்து வருகின்றனர். இவ்விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்தினருடன் ஆஸ்ட்ரேலிய காவல் துறையினர் தொடர்பு கொண்டு வருவதாகவும் ஸ்டார்மந்த் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.