பெனாசிர் புட்டோ சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் முழுவதும் பெரும் கலவரம் வெடித்துள்ளது. உத்தரவுக்கு அடங்காதவர்களை கண்டவுடன் சுட்டுத் தள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பெனாசிர் பூட்டோ சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அறிந்து ஆவேசமடைந்த பாகிஸ்தான் மக்கள் கட்சி தொண்டர்கள் இன்றும் பெரும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். பல பகுதிகளில் பாதுகாப்பையும் மீறி அவர்கள் சாலைகளில் திரண்டு கலவரத்தில் இறங்கினார்கள்.
பெனாசிர் பூட்டோவின் சொந்த மாநிலமான சிந்துவில் பல நகரங்களில் கலவரம் ஏற்பட்டது. "ஆயிரக்கணக்கானவர்கள் வன்முறையில் இறங்கியுள்ளதால் அங்கு நிலைமை கட்டுக்குள் இல்லை'' என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கராச்சியில் ஆயிரக்கணக்கில் திரண்ட பெனாசிர் ஆதரவாளர்கள், 3 பெட்ரோல் கிடங்குகளை தீ வைத்து கொளுத்தினார்கள். இதே போல் ஒரு அரசு அலுவலகம், தபால் அலுவலகமும் தீக்கிரையாயின. ஐதராபாத் நகரில் 20-க்கும் மேலான வாகனங்களை பெனாசிர் ஆதரவாளர்கள் தீ வைத்துக் கொளுத்தினார்கள்.
பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் தலைநகரான முசாபராபாத்தில் பெனாசிர் கட்சியினர் பெருமளவில் திரண்டு அதிபர் முஷரப்புக்கு எதிராக கோஷமிட்டனர். ராவல்பிண்டியிலும், இஸ்லாமாபாத்திலும் வன்முறை சிறிய அளவில் இருந்தது.
லாகூர் நகரில் 3 அரசு பேருந்துகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. கலவரத்தை அடக்க பல்வேறு நகரங்களில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தொண்டர்கள் 16 பேர் பலியானார்கள்.
பெனாசிர் பூட்டோவின் சொந்த ஊரான லர்கானாவிலும் பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் கலவரத்தில் ஈடுபட்டார்கள்.
பாகிஸ்தான் முழுவதும் வன்முறை பரவியதை தொடர்ந்து, அனைத்து முக்கிய நகரங்களுக்கும் ராணுவம் வரவழைக்கப்பட்டது. ராணுவத்துடன் சேர்ந்து உள்ளூர் காவலர்களும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.