Publish Date: Fri, 21 Dec 2007 (17:30 IST)
Updated Date: Fri, 21 Dec 2007 (17:30 IST)
பாகிஸ்தானின் வடமேற்கில் வசிக்கும் பழங்குடியின மக்களைக் கொண்டு உருவாகியுள்ள தெஹ்ரிக்-இ தலிபான்(டி.டி.பி.) என்ற தலிபான் ஆதரவு இயக்கத்துக்குத் தடை விதிப்பது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது.
உளவு அமைப்புகளின் உயரதிகாரிகள் சமர்ப்பித்த அறிக்கைகளின்படி இம்முடிவு எடுக்கப்பட்டதாக டெய்லி டைம்ஸ் நாளிதழ் செய்தி கூறுகிறது. இதை பாகிஸ்தான் இடைக்கால அரசின் உள்துறை அமைச்சர் ஹமீது நவாஸ் கானும் உறுதி செய்துள்ளார்.
தெஹ்ரிக்-இ தலிபான் இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள், இந்த இயக்கத்துக்கு நிதி உதவி அளிப்பவர்கள், ஆதரவாளர்களின் விவரங்கள் என எல்லாத் தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.
அண்மையில், பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராகவும் ஆப்கனில் உள்ள நேட்டோ படைகளுக்கு எதிராகவும் தெஹ்ரிக்-இ தலிபான் அமைப்பினர் புனிதப் போர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.