Publish Date: Tue, 18 Dec 2007 (17:44 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:36 IST)
ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் வசிக்கும் பழங்குடி மக்களிடையில் அல் காய்டா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் மறைந்திருக்கலாம் என்று பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் கூறியதை தலிபான்கள் மறுத்துள்ளனர்.
இது தொடர்பாக பாகிஸ்தான் ஐக்கிய தலிபான் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் மெளலாவி ஒமர் கூறுகையில், அமெரிக்காவிடம் இருந்து நிறைய பணம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முஷாரஃப் இதுபோன்ற பொய்யான தகவல்களை வெளியிடுகிறார் என்றார்.
"பாகிஸ்தானுக்குள் அமெரிக்கப் படைகளைக் குவிக்க வேண்டும் என்பதுதான் முஷாரஃப்பின் விருப்பம். இதன் மூலம் நிறையப் பணம் திரட்டலாம் என்று அவர் திட்டமிட்டுள்ளார்" என்று ஒமர் குற்றம்சாற்றினார்.
தங்கள் பாதுகாப்பில் ஒசாமா இல்லை என்று மறுத்த அதேநேரத்தில், ஒருவேளை ஒசாமா விரும்பினால் அவரை வரவேற்கத் தயாராக இருப்பதாகவும் ஒமர் கூறினார்.
மேலும், ஸ்வாத் பள்ளத்தாக்கில் இருந்து ராணுவத்தினரைத் திரும்பப் பெறுவதற்கு 10 நாட்கள் கெடு விதித்துள்ளோம். படையினர் வெளியேறாவிட்டால், மிகப்பெரிய தாக்குதலை பாகிஸ்தான் அரசு சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.