Publish Date: Mon, 03 Dec 2007 (16:15 IST)
Updated Date: Mon, 03 Dec 2007 (16:14 IST)
வாழ்க்கையில் சேர்ந்து வாழ முடியாத கணவன் - மனைவியால் இதுவரை குழந்தைகளுக்குத் தான் மிகப் பெரிய இழப்பு உருவாகி வந்ததாக எல்லோரும் கருதி வந்த நிலையில், அவர்களால் சற்றுச்சூழலுக்கும் ஆபத்து ஏற்படுகிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.அண்மை காலமாக ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றம் காரணமாக சமூகத்தில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தொன்றுதொட்டு கூட்டு குடும்பமாக வாழ்ந்த நம் சமூகம் தற்போது சிறு சிறு குடும்பங்களாக பிரிந்து வாழும் நிலை உருவானது. பொருளாதார உயர்வு குடும்பங்களையும் பாதித்துள்ளது. சிறுசிறு பிரச்சனைகளில் கூட விட்டுக் கொடுக்கும் தன்மையின்றி விவாகரத்து பெறும் நிலைக்கு ஆணும் பெண்ணும் செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது. இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு வந்தநிலையில் சமூக சீரழிவுகளும் உருவாக தொடங்கியது.இந்நிலையில் விவாகரத்து பெற்ற கணவன் - மனைவிகளாலும் சுற்றுச்சூழல் அதிக அளவு பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.இது தொடர்பாக மிக்சிகன் பல்கலைக் கழகம் முதல் முறையாக இந்த ஆய்வை மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்பவர்கள் அதிகமாக வாழும் 12 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில், அவ்வாறு வாழ்பவர்களுக்காக கூடுதலாக குடியிருப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் வாழ்பவர்கள் மின்சாரத்தை உபயோகிப்பதால் கூடுதலாக 53 விழுக்காடு மின்சாரம் செலவாகிறது என்றும், மேலும் 42 விழுக்காடு அதிகமாக தண்ணீரைச் செலவு செய்கின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது.அமெரிக்காவில் இவ்வாறு வாழ்பவர்கள் மட்டும் 73 பில்லியன் கிலோவாட் மின்சாரத்தை கடந்த 2005 -ம் ஆண்டு பயன்படுத்தியுள்ளனர்.அவர்கள் ஒரு வேளை சேர்ந்து வாழ்ந்திருந்தால் 73 பில்லியன் மின்சாரத்தை மிச்சப்படுத்தியிருக்க முடியும். 2,37,300 கோடி லிட்டர் குடிநீரையும் மிச்சப்படுத்த இயலும். பிரிந்து வாழ்பவர்கள் வீடு, சாலை உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளின் தேவை அதிகரிக்க முக்கிய காரணிகளாக உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் விவாகரத்துகளால், குறைந்த மக்களுக்காக அதிக அளவில் குடியிருப்புகளை உருவாக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் பெருமளவு இடங்கள் வீணாகின்றன. அதோடு மின்சாரம், குடிநீர் ஆகியவற்றின் தேவையும் அதிகரிக்கிறது.
சராசரியாக திருமணமாகி வாழ்பவர்களுக்குத் தேவைபடும் வீட்டு அறைகளை விட, கூடுதலாக அறைகள் கொண்ட வீடுகளில் விவாகரத்து பெற்ற தனிநபர்கள் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இவ்வாறு பிரிந்து வாழ்பவர்களுக்காக மட்டும் அமெரிக்காவில் தற்போது உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் 3 கோடியே 85 லட்சம் அறைகள் கூடுதலாக உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
தனிநபர்கள் ஒரு வீட்டில் வாழ்வதும் சற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று கூறுகின்றனர். தனியாக வாழ்பவர்கள் அதிக அளவு மின்சாரம், இடங்கள், பொருட்களை வாங்கி குவிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக வீட்டு உபயோகப் பொருட்களான தொலைக்காட்சி பெட்டி, டேப் ரிக்கார்டர், துணி துவைக்கும் இயந்திரங்கள், குளிர்சாதனப் பெட்டிகள் ஆகியவற்றை சராசரிக்கும் அதிகமாக 38 விழுக்காடு அளவுக்கு அதிகமாக வாங்கி குவிக்கின்றனர்.
அதேபோல நான்கு நபர்கள் வசிக்கும் ஒரு குடும்பத்திற்கு தேவையானதை விட அதிகமாக 42 விழுக்காடு பேக்கேஜிங் பொருட்கள், 55 விழுக்காடு மின்சாரம், 61 விழுக்காடு (தனிநபர் சராசரிக்கும் கூடுதலாக) சமையல் எரிவாயுவையும், ஆண்டுக்கு 1.25 டன்கள் குப்பையையும் உருவாக்குவதாகவும் தெரியவந்துள்ளது என்று சற்றுச்சூழல் சமச்சீர் துறை நிபுணர் ஜியான் ஹீ லீயூ கூறியுள்ளார்.
விவாகரத்தும் அதிகப்படியான குப்பைகளை உருவாக்க ஓர் காரணமாக உள்ளது. இது போன்றவர்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படும் எரிசக்தியால் பசுமையில்லா வாயுக்கள் அதிக அளவுக்கு வளிமண்டலத்துக்கு கடத்தப்படுகிறது. இதனால் சற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
விவாகரத்தால் மட்டும் இந்த நிலை என்று கூற முடியாது. நீண்ட காலமாக தனித்து வாழ்பவர்களாலும், கூட்டுக் குடும்ப சிதைவும் காரணமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Webdunia
Publish Date: Mon, 03 Dec 2007 (16:15 IST)
Updated Date: Mon, 03 Dec 2007 (16:14 IST)