Publish Date: Sat, 01 Dec 2007 (17:30 IST)
Updated Date: Sat, 01 Dec 2007 (17:30 IST)
நமது நாட்டில் எய்ட்ஸ் நோயைத் தடுப்பதற்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் வெற்றிபெற்று வருகின்றன என்று அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.
உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாளையொட்டி வாஷிங்டன்னில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்காவின் உலகளாவிய எய்ட்ஸ் விழிப்புணர்வு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மார்க் திபுல், இந்தியாவில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதற்கு பிரதமர் மன்மோகன் சிங்கும் அவர் தலைமையிலான அரசு செயல்படுத்தும் வெற்றிகரமான திட்டங்களுமே காரணம் என்று கூறினார்.
''தமிழகம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை அமெரிக்கா செயல்படுத்தி வருகிறது. இதனால், தமிழகத்தில் ஹெச்.ஐ.வி. தாக்குதலின் விழுக்காடு குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளது. ஆனால், இது நாங்கள் எதிர்பார்த்ததைவிடக் குறைவுதான்'' என்றும் மார்க் திபுல் கூறினார்.