Publish Date: Sun, 25 Nov 2007 (14:10 IST)
Updated Date: Sun, 25 Nov 2007 (12:54 IST)
பாகிஸ்தான் ராவல்பிண்டி நகரில் உள்ள ராணுவ தலைமையகம் மற்றும் உளவுப் பிரிவு அலுவலகம் ஆகியவற்றின் அருகே நேற்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது.
ராவல் பிண்டி நகரில் உள்ள ராணுவ தலைமையகம் அருகே நேற்று காலை 7.45 மணியளவில் கார் ஒன்று வந்தது. தலைமையகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருந்த சோதனைச் சாவடியில் அந்த கார் நிறுத்தப்பட்டது.
அங்கு பணியில் இருந்த வீரர்கள் காரை நோக்கிச் சென்றபோது கார் பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமானது. காரில் வந்த தீவிரவாதி, காருக்குள் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளான். அதில், அந்த தீவிரவாதியும் உயிரிழந்தான்.
சோதனைச் சாவடியில் பணியில் இருந்த இரண்டு வீரர்களும் படுகாயம் அடைந்தனர். முதலில் வந்த தகவலின்படி, ஒரு வீரர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தகவலை ராணுவ செய்தி தொடர்பாளர் வாஹீத் அரிஷாத் மறுத்தார். பாதுகாப்பு வீரர்கள் தடுத்து இருக்காவிட்டால் பெருத்த சேதம் ஏற்பட்டு இருக்கும். ராணுவ தலைமையகத்தை தகர்க்க நடந்த இந்த முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில் பைசாபாத்-முர்ரீ சாலையில் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. அலுவலகம் வழியாக, ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ அமைச்சகத்தை சேர்ந்த உயர் அதிகாரிகளை ஏற்றிக் கொண்டு நேற்று காலையில் ஒரு பேருந்து வந்தது. அந்த பேருந்தில் சுமார் 50 பேர் இருந்தனர்.
ஐ.எஸ்.ஐ. அலுவலகத்தின் வாயில் அருகே பேருந்து வந்தபோது பின்னால் வந்த ஒரு கார், பேருந்து மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பலத்த சப்தத்துடன் கார் வெடித்து சிதறியது. இந்த தாக்குதலில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
இந்த தாக்குதலில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் பலர் பலத்த காயங்களுடன் ராவல்பிண்டியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி 18 பேர் உயிரிழந்தனர். இதனால் இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 35 ஆனது.
சிகிச்சை பெற்று வருபவர்களில் பெரும்பாலானோரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தானில் நடந்த இரட்டை தற்கொலைப்படை தாக்குதல்களுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. எனினும் சில தினங்களுக்கு முன் ஒரு முக்கிய தீவிரவாத அமைப்பை சேர்ந்த சிராஜுதீன் என்ற தீவிரவாதி கூறுகையில், பாகிஸ்தானில் இனிமேல் தற்கொலைப்படை தாக்குதல்கள் தொடங்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.