Publish Date: Sun, 18 Nov 2007 (13:14 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:26 IST)
பாகிஸ்தானில் அவசர நிலையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருமாறு முஷராப்புக்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது அமெரிக்க துணை அமைச்சர் நெக்ரபோன்டே கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதை அடுத்து, ஏற்பட்டுள்ள நிலை குறித்து நேரில் பார்வையிட அமெரிக்க துணை அமைச்சர் நெக்ரேபோன்டே பாகிஸ்தான் வருகை தந்துள்ளார். நேற்று அவர் அதிபர் முஷாரப்பை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் இன்று இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவருமாறு முஷாரப்பிடம் தெரிவித்ததாக கூறினார்.
தேர்தல் நடைபெறும் என்று கூறியுள்ள முஷாரப், அவசரநிலையில் நியாயமான தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்பதை உணர வேண்டும் என்று கூறினார். ராணுவ தளபதி பதவியை ராஜினாமா செய்வதாக கூறிய உறுதிமொழியை முஷாரப் காப்பாற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சியினரை விடுதலை செய்யவேண்டும் என்று வலியுறுத்தப் பட்டிருப்பதாக நெக்ரேபோன்டே கூறினார்.