Publish Date: Wed, 14 Nov 2007 (15:36 IST)
Updated Date: Wed, 14 Nov 2007 (15:33 IST)
பாகிஸ்தானில் வீட்டுக் காவலில் இருந்து தப்பிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான இம்ரான் கான் இன்று கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட பிறகு முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
இதில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் காவலில் சிக்காமல் தப்பித் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில், இன்று லாகூரில் உள்ள பஞ்சாப் பல்கலைக் கழகத்திற்கு இம்ரான் கான் வருகை தந்துள்ளார். அவருக்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடி நின்று வரவேற்பளித்தனர்.
அப்போது சாதாரண உடையில் வந்திருந்த காவலர்கள் இம்ரான் கானை கைது செய்து அழைத்துச் சென்றதாக நிகழ்வைப் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமி ஜாமியத் தியூலெபா என்ற மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள்தான் இம்ரான் கானைப்பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர் என்றும் அந்தச் சாட்சிகள் கூறியுள்ளனர்.