Publish Date: Fri, 09 Nov 2007 (10:16 IST)
Updated Date: Fri, 09 Nov 2007 (10:15 IST)
''பாகிஸ்தானில் மக்களவைக்கான பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் நடை பெறும்'' என்று அதிபர் முஷாரப் அறிவித்துள்ளார்.
அதிபர் முஷாரப் தலைமையில் தேசிய பாதுகாப்பு குழுவின் கூட்டம் அய்வான் - இ- சதாரில் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு பின் முஷாரப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் நடைபெறும். நான் தேர்தலை நடத்தி, ஜனநாயக ஆட்சியை மீண்டும் மலர செய்ய முடிவெடுத்துள்ளேன். மக்களவை, ஒவ்வொரு மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் பல்வேறு தேதிகளில் முடிவடைகிறது. மக்களவைக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதா அல்லது தனித்தனியாக தேர்தல் நடத்துவதா என்பது, வரும் பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும் என்றார்.
ராணுவ தலைமை தளபதி பொறுப்பில் இருந்து எப்போது விலகுவீர்கள் என்று கேட்டதற்கு, அதிபர் தேர்தலின் முடிவுகளை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த பிரச்சனை நீதிமன்றத்தின் வரம்புக்குள் உள்ளது. அந்நிய நாடுகளின் நிர்ப்பந்தத்தாலோ அல்லது உள்நாட்டின் நெருக்கடிகளாலோ நான் தேர்தலை நடத்த முடிவு செய்யவில்லை. நான் ஜனநாயகத்தை மலர செய்வதற்காக, தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளேன் என்று கூறினார்.
முன்னதாக தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தில் முஷாரப் பேசும் போது, ஜனநாயக முறைப்படி அரசு அமையவிடாமல் சதியில் ஈடுபட்டுவரும் சக்திகளை ஒடுக்கவே அவசர நிலை அறிவிக்கப்பட்டதாக கூறினார்.
இந்த கூட்டத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதற்கு பின்பு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பிரதமர், மேலவை சபாநாயகர், மக்களவை சபாநாயகர், பஞ்சாப், சிந்து, வடமேற்கு எல்லைப்புற மாகாணம், பலூசிஸ்தான் ஆகிய மாநில முதலமைச்சர்கள், முப்படைகளின் தளபதிகள், உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக உள்துறை அமைச்சர், வடமேற்கு எல்லைபுற மாநில ஆளுநர், தரைப்படையின் துணை தளபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.