Publish Date: Wed, 07 Nov 2007 (20:41 IST)
Updated Date: Wed, 07 Nov 2007 (20:40 IST)
இலங்கையின் வடபகுதியில் உள்ள யாழ்ப்பாணத்தில் தங்கள் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பகுதியைக் கைப்பற்ற சிறிலங்க ராணுவம் நடத்திய தாக்குதலையடுத்து நடந்த கடும் சண்டையில் 16 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்!
யாழ்ப்பாணத்தில் கிளாலியில் இருந்து முகமாலை வரையிலான தங்களது கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பகுதியை நோக்கி இன்று அதிகாலை பீரங்கித் தாக்குதல்களுடன் முன்னேறிய சிறிலங்க ராணுவத்தினரை எதிர்கொண்டு புலிகள் கடும் போரில் ஈடுபட்டதாகவும், காலை 7.30 மணி வரை நீடித்த போரில் கடும் உயிர்ச் சேதத்தை சந்தித்த சிறிலங்க ராணுவம், தனது முயற்சியை கைவிட்டு பின்வாங்கியதாகவும் விடுதலைப் புலிகளின் ராணுவ பேச்சாளர் ராசையா இளந்திரையன் கூறியதாக தமிழ்நெட்.காம் செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தாக்குதலில் சிறிலங்க ராணுவ தரப்பில் 16 பேர் கொல்லப்பட்டதாகவும், தங்கள் தரப்பில் ஒருவர் பலியானதாகவும் கூறியுள்ள ராசையா இளந்திரையன், நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் இச்சண்டையில் காயமுற்றதாக கூறியுள்ளார்.
சிறிலங்க ராணுவத்தின் டாங்கி ஒன்று விடுதலைப் புலிகளின் தாக்குதலில் முழுமையாக சேதமுற்றதாகவும் இளந்திரையன் கூறியுள்ளார்.
இத்தாக்குதலில் சிறிலங்க ராணுவத்திடம் இருந்து 8 துப்பாக்கிகளையும், 27 பெங்களூர் டார்பிடோக்களையும், 127 கையெறி குண்டுகளையும், ஜி.பி.எஸ். திசைகாட்டி ஒன்றையும் தாங்கள் கைப்பற்றியுள்ளதாக இளந்திரையன் கூறியுள்ளார்.
Webdunia
Publish Date: Wed, 07 Nov 2007 (20:41 IST)
Updated Date: Wed, 07 Nov 2007 (20:40 IST)