Publish Date: Tue, 06 Nov 2007 (13:38 IST)
Updated Date: Tue, 06 Nov 2007 (13:38 IST)
அவசர நிலையைப் பிரகடனம் செய்தது குறித்து சர்வதேச நாடுகள் தெரிவித்துள்ள கண்டனங்களையும், விமர்சனங்களையும் நிராகரித்த பாகிஸ்தான் அரசு அது தங்கள் நாட்டின் உள் விவகாரம் என்று கூறிவிட்டது.
''நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக எங்களின் நண்பர்கள் தெரிவித்துள்ள கருத்துகளின் தன்மையை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அதேநேரத்தில் இது முழுக்க முழுக்க பாகிஸ்தானின் உள் விவகாரம்'' என்று பாகிஸ்தான் அயலுறவு அலுவலகச் செய்தித் தொடர்பாளர் முகமது சாதிக் தெரிவித்துள்ளார்.
''பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியவற்றின் பயங்கரமான முகங்களைச் சந்திப்பதில் பாகிஸ்தானுக்கு உள்ள சவால்களையும், அடிப்படை உண்மைகளையும் நட்பு நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அதிபர் முஷாரஃப் விரும்புகிறார்'' என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அயல்நாட்டுத் தூதர்களுடன் பேசிய அதிபர் முஷாரஃப், பொதுத்தேர்தலுக்கான தேதி பற்றி எதுவும் குறிப்பிடமறுத்ததுடன், ராணுவத் தளபதி பதவியை விட்டு விலகுவது பற்றியும் எதுவும் தெரிவிக்கவில்லை.
தொடர்புடைய வல்லுநர்களுடன் பேசிவிட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.