Publish Date: Mon, 22 Oct 2007 (12:21 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:32 IST)
சிறிலங்க விமானப்படையின் அநுராதபுரம் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலில் 5 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மேலும் 2 ஹெலிகாப்டர்கள் சேதமடைந்தன.
சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் உள்ள அநுராதபுரம் விமானப்படைத் தளம் சிறிலங்கா ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு இன்று அதிகாலை சுமார் 3.20 மணி அளவில் ஊடுருவிய விடுதலைப் புலிகள், சிறியவகை ஆயுதங்களைக் கொண்டு முதல் கட்டத் தாக்குதலைத் தொடக்கினர்.
அதேநேரத்தில் 4.00 மணி அளவில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 2 விமானங்கள் அப்பகுதியின் மீது பறந்து குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளன. ராணுவத்தினரும் உடனடியாக எதிர்த்தாக்குதலை நடத்தினர்.
இந்த மோதலில் ராணுவத்தினர் 5 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இத்தாக்குதலில் விமானத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா விமானப் படையின் 2 எம்ஐ-24 வகை ஹெலிகாப்டர்கள் சேதமடைந்தன என்று விமானப்படை அதிகாரி அஜந்தா சில்வா தெரிவித்தார்.
'' விடுதலைப் புலிகளின் விமானங்கள் வடக்கு வவுனியாவில் இருந்து வந்திருக்கலாம். அவை இரண்டு குண்டுகளை வீசியுள்ளன. இத்தாக்குதலில் விமானப்படை தளத்திற்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது'' என்று ராணுவச் செய்தித் தொடர்பாளர் உதய நானயக்கார கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் பதுங்கியிருக்கலாம் என்று சந்தேகப்படும் பகுதிகளில் காவல்துறையினரும், ராணுவத்தினரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையினை நடத்தி வருகின்றனர். தற்போது நிலைமை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், வன்னியில் இன்று அதிகாலை 5:30 மணிக்கு நுழைந்த 6 மிக் ரக விமானங்கள் நீண்ட நேரம் வட்டமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டன என்று விடுதலைப் புலிகளின் ஆதரவு இணைய தளங்கள் தெரிவிக்கின்றன.
அவற்றில் ஒன்றான தமிழ்நெட்.காம் என்ற தளத்தில், '' முதல் முறையாக அநுராதபுரத்தில் உள்ள சிறிலங்கா ராணுவ விமானப்படைத் தளத்தின் மீது தரை வழியாகவும், வான் வழியாகவும் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தினோம்'' என்று விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாகும். இங்குள்ள புத்த விகாரங்களைக் காண்பதற்காக ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகள் நடத்தியுள்ள 5-வது வான் வழித் தாக்குதல் இதுவாகும். இதற்கு முன், ஏப்ரல் 28 -ஆம் தேதி கொழும்பு விமான தளத்தையொட்டியுள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தினர்.
Webdunia
Publish Date: Mon, 22 Oct 2007 (12:21 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:32 IST)